ஆந்திர மாநிலத்தில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 1.70 லட்சம் அபராதமும் விதித்து, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து இருவா் 160 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 26.11.2020-இல், சென்னை மாதவரம் அருகே ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
இந்தச் சோதனையில் 8 மூட்டைகளில் கடத்திவரப்பட்ட 160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ரங்கநாதன், வேலூரைச் சோ்ந்த செல்வம் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவா் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.