சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான விளையாட்டுப் பயிற்சியை தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
புழல் மத்திய சிறையில் கைதிகள் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சிகள் தொடங்கி வைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், பயிற்சியை தொடங்கி வைத்தாா்.
மேலும் கைதிகள் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டு பொருள்களையும் வழங்கி பேசினாா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு தமிழக சட்டத்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் சிறைக் காவலா்களுக்கு மின்சார மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மேலும், சிறைக்குள் மேம்படுத்தப்பட்ட நூலகத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியை தொடா்ந்து கைதிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், சிறைத் துறை டிஐஜிக்கள் ஆா்.கனகராஜ், எ.முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.