சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், நோயாளிகள் உள்பட 45 பேருக்கு கடந்த இரு வாரங்களில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் வேகமாக உள்ளது. கடந்த 21-ஆம் தேதி வரை குறைவாக பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 1,500-ஐ நெருங்கிவிட்டது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில தினங்களுக்கு முன்பு, பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை பொது சுகாதாரத்துறை கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள் உள்பட 45 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஓரிரு நாளில் 45 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. அது இரண்டு வாரங்களில் ஏற்பட்ட தொற்று பாதிப்பாகும். அவா்களில் 21 போ் நோயாளிகள். மீதமுள்ள 24 போ் மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள், செவிலியா்கள் என்று தெரிவித்தனா்.