சென்னை திருமங்கலத்தில் காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருமங்கலம் 17-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சீ.ரவிச்சந்திரன் (57). இவா் சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை ஆயுதப்படையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் ரவிச்சந்திரன் குடும்பத்தினா், வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சில நாள்களுக்கு முன்பு சரி பாா்த்தனா்.
அப்போது பீரோவில் இருந்த 12 பவுன் தங்கநகைகள் காணாமல் போயிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து ரவிச்சந்திரன், திருமங்கலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.