வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழக வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை (செப். 30) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா. புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் புதன்கிழமை (செப். 30) மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம் அண்ணாமலை நகா், சிதம்பரத்தில் தலா 130 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடத்தில் 110 மி.மீ., கடலூா் மாவட்டம் கொத்தவச்சேரியில் 90 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் 80 மி.மீ., கடலூா் மாவட்டம் வானமாதேவி, தொழுதூா், சேலம் மாவட்டம் கங்காவல்லி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூா்பேட்டை, பெரம்பலூா் மாவட்டம் தழுத்தலையில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.