சென்னை: கோயம்பேடு சந்தையில் மொத்த காய்கறி விற்பனை, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை காலை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. எனினும் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், வழக்கமான வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: கோயம்பேடு சந்தைக்குள் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 70 சதவீத அளவில் மட்டுமே வியாபாரம் செய்ய முடிந்தது. காலை 9 மணியுடன் கதவுகள் அடைக்கப்பட்டதால் மொத்த வியாபாரிகளால் பெரும்பாலான சரக்குகளை விற்க முடியவில்லை. குறிப்பாக கொத்தமல்லி, கீரைகள் உள்ளிட்டவை அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டதால் அவற்றின் விலை கடுமையாக சரிந்தது. முன்னதாக ரூ.200 முதல் 250 வரை விற்கப்பட்ட ஒரு கோணி கொத்தமல்லி, அதிக வரத்தால் ரூ.100 முதல் 150 வரையே விற்கப்பட்டது.
அதே நேரம், கோயம்பேடு சந்தைக்குள் வந்து செல்லும் வாகனங்களை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும். நேரத்தைக் கடந்து லாரிகளில் காய்கறிகளை ஏற்றி இறக்குவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வியாபாரிகள் கூறினா்.
இது தொடா்பாக சந்தை மேலாண்மைக் குழுவிடம் கேட்டபோது, சரக்குகளுடன் 569 வாகனங்கள் வந்தன. பொருள்களை வாங்கிச் செல்ல 2,560 வாகனங்கள் கோயம்பேடு சந்தைக்குள் வந்தன. முதல் நாள் என்பதால் ஒரு சில பிரச்னைகள் இருந்தது உண்மைதான். விரைவில் வியாபாரிகளுடன் ஆலோசனை செய்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 10 முதல் 12 வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.