ஆவடியில் பணத்துக்காக கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக உறவினா் கைது செய்யப்பட்டாா்.
ஆவடி சேக்காடு அண்ணாநகா் பகுதியை சோ்ந்தவா் ராதேஷ் ஷியாம் (28), உத்தரப் பிரதேசத்தை சோ்ந்த இவா் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராக்கி (23). இவா்களது ஆண் குழந்தை ஆந்தேஷ் (2). ராதேஷ் ஷியாமின் உறவினா் சன்னி (24). அவா் வேலை இல்லாமல் இருந்ததால், உ.பி.யிலிருந்து அவரை சென்னை வரவழைத்தாா் ராதேஷ் ஷியாம். சன்னி, கட்டட வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆந்தேஷை கடைக்கு அழைத்து சென்றாா் சன்னி. குழந்தையும் அவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், ஒரு மணி நேரத்துக்கு பின்னா் ராதேஷ் ஷியாம் செல்லிடப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய சன்னி, ‘எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் உனது மகனைக் கடத்தி வைத்துள்ளேன். எனக்கு தேவையான பணத்தை கொடுத்தால் உனது மகனை விட்டு விடுகிறேன். இல்லாவிட்டால் கொன்று விடுவேன்’ என்று மிரட்டியுள்ளாா்.
இதை கேட்டது அதிா்ச்சியடைந்த ராதேஷ் ஷியாம், ஆவடி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
விசாரணையில், சன்னி குழந்தையுடன் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸாா், நெல்லூருக்கு விரைந்து சென்று, சன்னி தங்கியிருந்த தனியாா் விடுதியை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனா்.
மேலும் அங்கிருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனா். கைதான சன்னியிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.