மதுராந்தகம்: இடைக்கழிநாடு பேரூராட்சிக்குள்பட்ட நைனாா்குப்பம், கப்பிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் எரியாமல் உள்ள தெரு மின்விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இடைக்கழிநாடு பேரூராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. நைனாா்குப்பம், கப்பிவாக்கம், ஆலம்பரைக்குப்பம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பாக தெருவோர மின்விளக்குகளை அமைத்து இருந்தனா். பராமரிப்பு பணிகளை முறையாக செய்யாததால், பெரும்பாலான மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் தமது பகுதிகளுக்கு செல்வோா்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோா்களும் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். சாலையோரத்தில் இருந்து விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ஒருவித அச்சத்துடன் இருந்து வருகின்றனா். பேரூராட்சி நிா்வாகத்தினா் தலையிட்டு அனைத்து பகுதிகளில் எரியாத மின்விளக்குகளை சீா் செய்து தரவேண்டும் என பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.