செங்கல்பட்டு

11 மாதங்களுக்குப் பிறகு மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் திறப்பு

14th Feb 2021 04:26 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பழமை வாய்ந்த மாமல்லபுரம் கலங்கரைவிளக்கம் 11 மாதங்கக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள நீளமான பாறைமீது இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது, 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம். 
இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதாவது, 1887-ல் கட்டப்பட்டது. வங்கக்கடலில் பயணிக்கும் கப்பல் மற்றும் படகுகள் இப்பகுதியை அறிந்து விலகிச் செல்லவும், மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. 
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்த கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது.
 இந்த கலங்கரை விளக்கத்தில் துவக்கத்தில் மண்ணெண்ணெய் மூலம் விளக்கு எரிக்கப்பட்டது. கடந்த1940-ல் மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டு, நவீனதொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம். 
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் கடந்த 11 மாதமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில் இன்று சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக மீண்டும் 11 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. 
நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் இதன் மீது ஏறி மாமல்லபுரம் நகரின் அழகை கண்டுகளிக்க இன்று அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்தை காண வந்திருந்தனர். அங்கு பலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 
இதன் மேல் ஏறி பார்க்க சுற்றுலாப் பயணிகள் தலா ஒருவருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் கலங்கரை விளக்க வளாகத்தில் உள்ள அருங்காட்சியகமும் 11 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து  சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ஏறி மாமல்லபுரம் சுற்றுலா இடங்களை பைனாகுலர் மூலம் கண்டு களித்தும் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Mamallapuram
ADVERTISEMENT
ADVERTISEMENT