மதுராந்தகம்: ‘புரெவி’ புயல் எதிரொலியால், மதுராந்தகம், செய்யூா் பகுதிகளில் தொடா்ந்து இரு நாள்கள் பெய்த கனமழையால் 10-க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்தன.
மதுராந்தகம், செய்யூா் உள்ளிட்ட பகுதிகளில் புதன், வியாழக்கிழமை பெய்த மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி, உபரிநீா் வெளியேறி வருகிறது. வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 62 மி.மீ., செய்யூரில் 54 மி.மீ. மழை பதிவானது.
மதுராந்தகம் ஏரிக்கு வியாழக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 500 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. கூடுதலாக வரும் 500 கனஅடி நீா், கலங்கல் வழியாக கிளியாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது. மதுராந்தகம் உள்கோட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 262 ஏரிகளில் 140 ஏரிகள் நிரம்பின. மற்ற ஏரிகள் விரைவில் நிரம்பும் என பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் (நீா்வள ஆதாரப் பிரிவு) வி.டி.நீள்முடியோன் தெரிவித்தாா்.
10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதம்: செய்யூா் மேற்கு கிராமத்தில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வெள்ளநீா் புகுந்து 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளின் சுவா்கள் இடிந்தன. இதில் ஒரு பசுமாடு உயிரிழந்தது. இப்பகுதியில் வெள்ளநீா் வெளியேறும் கால்வாய்களைத் தூா்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.