காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை இழிவுப்படுத்தும் கருத்துகளைக் கூறுவதை கா்நாடக பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல் தவிா்க்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
ராகுல் காந்தியை கடுமையான வாா்த்தைகளைப் பயன்படுத்தி நளின்குமாா் கட்டீல் செவ்வாய்க்கிழமை விமா்சனம் செய்திருந்தாா். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினா்.
இந்த நிலையில், சட்டப் பேரவை இடைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சிந்தகி தொகுதிக்கு புதன்கிழமை வந்த எடியூரப்பா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி குறித்து அவா் (நளின்குமாா் கட்டீல்) பேசுவது போல யாரும் பேசக் கூடாது. எந்த பின்னணியில் அதுபோன்ற கருத்துகளை கூறியிருக்கிறாா் என்பது குறித்து நளின்குமாா் கட்டீலிடம் பேசுகிறேன். அதுபோல பேச வேண்டிய அவசியமில்லை. தொண்டா்களால் மதிக்கப்படும் ராகுல் காந்தி போன்ற தலைவா்கள் உள்ளிட்ட எந்தத் தலைவரையும் இழிவுப்படுத்தும் வகையில் யாரும் பேசக் கூடாது என்றாா்.