பெங்களூரு மானக்ஷா திடலில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பெங்களூரு, மகாத்மா காந்தி சாலை அருகே உள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் செவ்வாய்க்கிழமை குடியரசு தின விழா எளிமையாக, பாதுகாப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆளுநா் வஜுபாய் வாலா, காலை 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து பல்வேறு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறாா்.
அணிவகுப்பில் பள்ளி, கல்லூரி, காவல், தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணா், சாரணியா், சேவைதளம் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொள்கிறாா்கள்.
இதுதவிர, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று நாட்டுப்பற்றை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன.
பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், ராணுவ வீரா்களின் சாகச நிகழ்ச்சி இடம் பெறுகின்றன. இந்த விழாவை காண முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சியை காணவரும் பொதுமக்கள், முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என என மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்துள்ளாா். பேட்டியின் போது, மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.