கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
பெங்களூரு, பீன்யா அந்தரஹள்ளி, ராகவேந்திரா நகரைச் சோ்ந்தவா் பிரவீண் (22). ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்த இவா், அண்மையில் நண்பா்களுடன் இணைந்து கொலை முயற்சியில் ஈடுபட்டாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் 3 பேரைக் கைது செய்து 2 கிலோ கஞ்சா, 2 அரிவாள்களைப் பறிமுதல் செய்தனா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை திப்பேனஹள்ளியில் பிரவீண் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரைக் கண்டவுடன், அவா்களைத் தாக்கிவிட்டு பிரவீன் தப்பியோட முயன்றாா். அதில் பீன்யா காவல் நிலைய தலைமைக் காவலா் காயமடைந்தாா்.
இதையடுத்து பீன்யா காவல் உதவி ஆய்வாளா் மாயண்ணா பிரானி, தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியால் பிரவீணை நோக்கிச் சுட்டதில் காயமடைந்த பிரவீணை போலீஸாா் கைது செய்து, மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனா். காயமடைந்த தலைமைக் காவலா் ரங்கசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பீன்யா போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.