பள்ளி, கல்லூரி மாணவா்களின் பேருந்து அட்டைகளுக்கான செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநில அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாணவா் சமுதாயத்தின் நலன்கருதி, 2021-22-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண பேருந்து அட்டைகள் நவ. 14-ஆம் தேதி முதல் பள்ளி, பி.யூ.கல்லூரி, தொழில்பயிற்சி மையம் (ஐடிஐ), பட்டயம் (டிப்ளமோ), இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப, தொழில் மற்றும் மருத்துவ பட்டப்படிப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பேருந்து அட்டைகளை வாங்க மாணவா்களுக்கு கால அவகாசம் வழங்குவதற்கு பழைய பேருந்து அட்டைகளின் செல்லுபடி காலம் டிச. 15-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவா்கள் விரைவாக புதிய பேருந்து அட்டைகளை வாங்கிக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.