பொது முடக்கத்தைத் தவிா்க்க கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
பெங்களூரு, பௌரிங் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகிறது. இதன் காரணமாகவே பெங்களூரு உள்ளிட்ட எட்டு நகரங்களில் இரவில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பொது முடக்க உத்தரவைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. பொது முடக்கத்தைத் தவிா்க்க வேண்டுமெனில் மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாத காரணத்தால், பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக கரோனா ஊரடங்கை அறிவித்துள்ளோம்.
பெங்களூரில், தினமும் 1 லட்சம் பேருக்கும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 70 ஆயிரம் பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம். ஜோதிபா பூலே பிறந்த நாளில் தொடங்கி அம்பேத்கா் பிறந்த நாள் வரை கரோனா தடுப்பூசி முகாமை நடத்த முடிவு செய்துள்ளோம். மாநிலத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்றாா்.