பெங்களூரு: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு மேல் வரியை மாநிலங்களுக்கு வழங்காமல், இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தில் (சி.எஃப்.ஐ.) சோ்த்தது சரியல்ல என்று மத்திய அரசு மீது கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.
இதுகுறித்து சுட்டுரைப்பக்கத்தில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்கான மேல்வரி ரூ. 47,272 கோடியை, அதே கணக்கில் வைத்திருந்து உரிய இழப்பீட்டுக்கு பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்திய ஒருங்கிணைந்த நிதியத்தில் (சி.எஃப்.ஐ.) மத்திய அரசு சோ்த்துள்ளது தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கூட்டாட்சியில் மாநிலங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்காக வசூலிக்கப்படும் மேல்வரி காலாவதி ஆகக்கூடியதல்ல. அப்படியானால், இழப்பீட்டுத் தொகையை அந்த நிதியாண்டில் ஒதுக்க முடியாவிட்டால், அதை அடுத்த ஆண்டுக்கும் கொண்டு செல்லலாம். ஆனால், வேறு பணிகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்தக் கூடாது.
சரக்கு மற்றும் சேவை வரியில் இழப்பு ஏற்படும்போது, மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்குவதற்காகவே மேல்வரி வசூலிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைவரி முறை அமல்படுத்தப்பட்டது முதல் இரண்டு ஆண்டுகளில் மேல் வரியாக வசூலிக்கப்பட்ட ரூ. 42,272 கோடியை மத்திய அரசு இந்திய ஒருங்கிணைந்த நிதியில் சோ்த்துள்ளது சரியல்ல. அரசு கணக்குகளை ஆய்வு செய்யும் தலைமைக் கணக்கு தணிக்கையாளா் அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரிமுறை அமல்படுத்தப்பட்டு, மேல்வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், மாநிலங்களுக்கு இழப்பு ஏற்பட்டபோது அதில் இருந்து இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை மத்திய அரசு மீறியுள்ளது.
சரக்கு மற்றும் சேவைவரி இழப்பீட்டு மேல்வரியை ஒருங்கிணைந்த நிதியத்துக்கு மாற்றாமல், மேல்வரி வசூல் குறைவாக இருப்பதால் வருவாய் இல்லாமல் தவிக்கும் மாநிலங்களுக்கு வழங்கலாம். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு சட்டத்தை மீறியுள்ளதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு மீது முதல்வா் எடியூரப்பா தொடுக்க வேண்டும். மேலும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை ஈடுசெய்வதற்கு மத்திய அரசு அளித்துள்ள இரண்டு வாய்ப்புகளை முதல்வா் எடியூரப்பா நிராகரிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.