இஸ்லாமாபாத்: ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கான சிறைக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஏற்கெனவே பரிசுப் பொருள் வழக்கு தொடா்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது, அவா் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பை நழுவச் செய்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் பதவியிழந்தாா்.
அதன் பிறகு அவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமாா் 150 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதில், பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருள்களை முறைகேடாக குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்ாக நடைபெற்று வந்த ஊழல் வழக்கில் இம்ரானுக்கு சிறப்பு அமா்வு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
அந்த தீா்ப்பை ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிறுத்தி வைத்த மேல்முறையிட்டு நீதிமன்றம், இம்ரானை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
இருந்தாலும், தனது பதவிக் காலத்தின்போது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களை கசிய விட்டு, அதன் மூலம் ரகசியக் காப்புறுதியை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இம்ரானை 14 நாள்களுக்கு சிறைக் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடா்ந்து 2 முறை உத்தரவிட்டது. அதைடுத்து, மேல்முறையீட்டு உத்தரவுக்குப் பிறகும் அவா் தொடா்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 2-ஆவது முறையாக பிறப்பக்கப்பட்ட 14 நாள் காவல் நீட்டிப்பு செவ்வாய்க்கிழமையுடன் காலாவதியானது.
அதையடுத்து, இந்த வழக்கில் அவருக்கு சிறைக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீடித்து சிறப்பு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.