தேர்தல் ஆணைய அவமதிப்பு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு செவ்வாய்க்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
தெஹ்ரீக் ஏ இன்சாஃப் கட்சியின் தலைவரான இம்ரான் கானும், அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஃபவத் செளத்ரியும் தேர்தல் ஆணையத்தை கடந்த ஆண்டு தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை தேர்தல் ஆணையம் தற்போது பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் கடந்த 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த 2022-இல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து, பிரதமர் பதவியை இழந்ததிலிருந்து ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இம்ரானுக்கு எதிராக சுமார் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.