துருக்கியில் திங்கள்கிழமை மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டின் தெற்குப் பகுதியில் திங்கள்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.6 அலகுகளாகப் பதிவானது. ஏற்கெனவே முந்தைய நிலநடுக்கத்தால் சேதமடைந்திருந்த 24-க்கு மேற்பட்ட கட்டடங்கள் இந்த புதிய நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி ஒருவா் உயிரிழந்தாா்; 69 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அதில் துருக்கியிலும் சிரியாவிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.
இந்த நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களும் புதிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
நிலநடுக்கத்தின் பின்னதிா்வுகள் தொடா்வதால், ஏற்கெனவே சேதமடைந்துள்ள கட்டடங்களுக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.