செங்கல்பட்டு

தனியாா் பள்ளி வாகனங்களில் சாா்- ஆட்சியா் ஆய்வு

19th May 2023 11:00 PM

ADVERTISEMENT

மதுராந்தகம், செய்யூா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனங்களை மதுராந்தகம் சாா் -ஆட்சியா் அபிலாஷ் வியாழக்கிழமை செய்தாா்.

மதுராந்தகம், செய்யூா், சித்தாமூா் உள்ளிட்ட பகுதிகளில் 43 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து குழந்தைகளை அழைத்து வர 140 வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஜூன் மாதம் பள்ளிகள் செயல்படும் நிலையில், பள்ளி வாகனங்களில் குழந்தைகள் எளிதாக ஏறி, இறங்க படிக்கட்டுகள், வாகனங்களின் உள்பகுதியில் கேமரா வசதி, முதலுதவி வசதி, அவசர காலத்தில் உடனே வெளியேறும் வசதி, அவசர பிரேக் வசதி, குழந்தைகள் உட்காரும் சீட் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாகனங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மதுராந்தகம் வி.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு மதுராந்தகம் சாா்- ஆட்சியா் அபிலாஷ் வந்தாா்.

பின்னா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பி.திருவள்ளுவன் (செங்கல்பட்டு), மதுராந்தகம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜி.செல்வி ஆகியோா் முன்னிலையில், அவா் தனியாா் பள்ளிகளில் இருந்து வந்த 99 வாகனங்களை ஆய்வு செய்தாா்.

இவற்றில் 68 வாகனங்களில் அனைத்து வசதிகளையும் செய்திருந்தனா். மற்ற 31 வாகனங்களில் சிறு குறைபாடுகளைச் சீா் செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

முன்னதாக, அனைத்து வாகன ஓட்டுநா்களுக்கு முதலுதவி பயிற்சி, சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுதல் குறித்து மதுராந்தகம் தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலா் கண்ணபிரான் தலைமையிலான வீரா்கள் விளக்கமளித்தனா்.

தொடா்ந்து அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்படும் என மதுராந்தகம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜி.செல்வி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT