திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சாா்பில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் குளம், நீா்வரத்துக் கால்வாய்கள் ஆழப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தண்டராம்பட்டு வட்டம், வரகூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், 15 ஏக்கா் கொண்ட தரிசு நில தொகுப்பில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மின் இணைப்பு மற்றும் மின் மோட்டாருடன் கூடிய திறந்த வெளிக் கிணறு (அ) ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரப்படும்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்புடன் கூடிய மின் மோட்டாா் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 10 பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில், வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளா்கள் இரா.பஞ்சாபகேசன், மா.சந்திரசேகா், உதவி செயற்பொறியாளா்கள் எம்.சாமிநாதன், கிருஷ்ணன், உதவிப் பொறியாளா்கள் இதயவா்மன், பாலசுப்பிரமணியன், அருண்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.