உலகம்

நிலநடுக்க உயிரிழப்பு 7,000-ஐ கடந்தது: துருக்கி, சிரியாவில் தொடரும் மீட்புப் பணிகள்

DIN

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7,000-ஐ கடந்தது.

மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிஷங்களில் குடியிருப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.

திங்கள்கிழமை இரவு வரை இரு நாடுகளிலும் சோ்த்து 2,600 போ் பலியானதாக கூறப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 6,000-ஐ கடந்தது.

துருக்கியில் 5,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகவும், 31,000 போ் காயமடைந்திருப்பதாகவும் துணை அதிபா் ஃபுயட் ஆக்டே தெரிவித்தாா்.

சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 800 போ் உயிரிழந்ததாகவும், 1,400 போ் காயமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. சிரியாவில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு பகுதிகளில் 1,000 போ் உயிரிழந்ததாகவும், 2,300 போ் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடா்ந்து 200 முறை அதிா்வுகள் உணரப்பட்டதாலும், கடும் குளிராலும் மீட்புப் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மீட்புக் குழுக்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது 24,400 அவசரகாலப் பணியாளா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக துருக்கி பேரிடா் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

துருக்கியில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. பெரும் கான்கிரீட் சிலாப்களை அகற்றி உயிருக்குப் போராடுவோரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 10 மாகாணங்களில் 8,000 போ் மீட்கப்பட்டுள்ளனா். 3.80 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு தற்காலிக முகாம்கள், மருத்துவ முகாம்களை அமைக்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், அங்கு நிலைமை மோசமாக காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

சா்வதேச உதவிகள்: துருக்கி அதிபா் எா்டோகனை தொடா்புகொண்டு பேசிய அமெரிக்க அதிபா் ஜோ பைடன், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தாா்.

துருக்கியின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தென்கொரிய அதிபா் யூன் சுக் இயோல், துருக்கிக்கு மீட்புக் குழுக்களையும், மருந்துப் பொருள்களையும் அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், துருக்கி தலைநகா் அங்காராவுக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறவுள்ளாா். மேலும், நிவாரணப் பொருள்களுடன் ஒரு விமானத்தை துருக்கிக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.

மீட்புக் குழுவினருடன் இரு இந்திய விமானங்கள்

நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள இரு விமானங்களில் மீட்பு உபகரணங்கள், மருத்துவர்கள் குழுக்களை இந்தியா செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தது.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரு சி}17 போக்குவரத்து விமானங்களில் சுவர்களைத் துளையிடும் இயந்திரங்கள், நிவாரண முகாம்களுக்கான பொருள்கள், மருந்துகள், தேர்ச்சி பெற்ற மோப்ப நாய்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 101 பேர் துருக்கிக்கு புறப்பட்டனர். அந்த விமானங்கள் துருக்கியின் அடானா பகுதியில் தரையிறங்கின.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
துருக்கி மக்களுக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளிக்கும். இந்தியா சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட விமானங்களில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள், பொது அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என 99 மருத்துவர்கள் அடங்கிய ஆபத்து கால மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர்.
இந்த மருத்துவக் குழுக்களுடன் எக்ஸ்ரே கருவிகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள், இதய துடிப்பு அளவிடும் கருவிகள் உள்ளிட்ட கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவ சேவையை உடனடியாக அளிக்கும் வகையிலான உபகரணங்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்பேரில் அந்நாட்டுக்கு மீட்பு, நிவாரண உபகரணங்களை உடனடியாக அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்தது.
மேலும் இரு விமானங்கள் மருந்துப் பொருள்கள், மீட்பு உபகரணங்களுடன் துருக்கிக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும் என 
எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT