இஸ்தான்புல்: துருக்கி மற்றும் சிரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரம் ஆன நிலையில், தொடர்ந்து அங்கு மூன்றாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சைக்காக தவித்து வரும் நிலையில், உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த உலகயை துயரத்துக்குள்ளாக்கியிருக்கும் இந்த துருக்கி - சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒரே ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த கொடுந்துயரம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, ஃபிராங்க் ஹோகர்பீட்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி, பிப்ரவரி 3ஆம் தேதி தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாள்களிலோ நிலநடுக்கம் நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியின் வரைபடத்துடன் அவர் இந்தப் பதிவை செய்திருக்கிறார்.
அவரது சுட்டுரைப் பக்கத்தில் அவரைப் பற்றிய தகவலில், நெதர்லாந்தில் உள்ள சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையம், பிப்ரவரி 4 முதல் 6ஆம் தேதி வரை நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இது ரிக்டர் அளவில் 6 புள்ளிகளை விடவும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த தகவலையும், ஹோகர்பீட்ஸ் ரீடிவீட் செய்துள்ளார்.
இந்த டிவிட்டர் பதிவு, துருக்கி, சிரியாவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய பிறகே வெளி உலகுக்குத்தெரிய வந்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மத்திய துருக்கியில் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு தொடர் நில அதிர்வுகளும் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.