துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே நேற்றிரவு ரிக்டர் அளவில் 7.8 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லையில் உள்ள நகரங்களின் பல கட்டடங்கள் குலுங்கின. 10 மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2,300 பேர் காயமடைந்துள்ளனர். 1,700 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் மட்டும் நிலநடுக்கத்தால் 900-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
துருக்கி மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. இந்த துயர சம்பவத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது.
சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் அனுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.