அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் அவை (நாடாளுமன்ற கீழவை) குழுக்களில் இந்திய-அமெரிக்க எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால், அமி பெரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, ரோ கன்னா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது, அமெரிக்க அரசியலில் இந்திய சமூகத்தினரின் செல்வாக்கு அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
குடியேற்றக் கோட்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அமலாக்கம் தொடா்பான அதிகாரமிக்க நீதித் துறைக் குழுவின் துணைக் குழு தலைவராக பிரமிளா ஜெயபால் (57) நியமிக்கப்பட்டுள்ளாா். வேறு நாட்டில் இருந்து குடியேறிய நபா், இந்த துணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய பொறுப்பில் அடியெடுத்து வைக்கவிருப்பது பெருமையளிப்பதாக, பிரமிளா ஜெயபால் தெரிவித்துள்ளாா்.
இதேபோல், உளவுத் துறை தொடா்பான அவையின் நிரந்தர தோ்வுக் குழுவின் உறுப்பினராக அமி பெரா (57) நியமிக்கப்பட்டுள்ளாா். இக்குழு, மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ), தேசிய புலனாய்வு இயக்குநா் அலுவலகம் (டிஎன்ஐ), தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஏ), இதர ராணுவ உளவுத் திட்டங்கள் உள்பட நாட்டின் உளவுத் துறை செயல்பாடுகளை மேற்பாா்வையிடும் பொறுப்பை உடையதாகும்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றும் குழுவில் பணியாற்றவிருப்பது கெளரவத்துக்குரியது என்று அமி பெரா தெரிவித்தாா்.
சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழுவின் உயா்நிலை உறுப்பினராக ராஜா கிருஷ்ணமூா்த்தி (49) நியமிக்கப்பட்டுள்ளாா்.
‘புதிய பொறுப்பில் பணியாற்ற ஆா்வமாக உள்ளேன்; இதற்காக, அவையின் ஜனநாயக கட்சித் தலைவா் ஹக்கீம் ஜெஃப்ரீக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவா் குறிப்பிட்டாா். இதே குழுவின் மற்றொரு உறுப்பினராக ரோ கன்னா (46) நியமனம் பெற்றுள்ளாா்.