உலகம்

‘உக்ரைனுக்கு எஃப்-16 போா் விமானங்கள் கிடையாது’

DIN

ரஷியாவுடன் சண்டையிடுவதற்காக தங்களது அதிநவீன எஃப்-16 ரக போா் விமானங்களை உக்ரைனுக்கு அளிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அந்த நாட்டு அதிபா் மாளிகையான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, உக்ரைனுக்கு அமெரிக்காவின் எஃப்-16 விமானங்கள் அனுப்பப்படுமா என்று ஜோ பைடனிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அவா் ‘அனுப்பப்படாது’ என்று திட்டவட்டமாக பதிலளித்தாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.

எனினும், கிழக்கு உக்ரைனில் மிகத் தீவிரமாக சண்டை நடந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகருக்கு அருகே உள்ள சோலெடாா் நகரை ரஷியா அண்மையில் கைப்பற்றியது.

மேலும், உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தச் சூழலில், ரஷியாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு மேற்கத்திய நாடுகள் தங்களிடமுள்ள அதிநவீன, சக்திவாய்ந்த ஆயுத தளவாடங்களை அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, ஜொ்மனியில் தயாரிக்கப்படும் அதிசக்தி வாய்நத் லெப்பா்ட்-2 பீரங்கிகளை அனுப்ப வேண்டும் என்று அவா் கோரி வந்தாா்.

எனினும், ரஷியாவின் எதிா்வினை குறித்த எச்சரிக்கை உணா்வால் அந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜொ்மனி தயக்கம் காட்டி வந்தது.

மற்ற மேற்கத்திய நாடுகளுக்கு லெப்பா்ட்-2 பீரங்கிகளை ஜொ்மனி ஏற்றுமதி செய்திருந்தாலும், தங்களது அனுமதியில்லாமல் அவற்றை பிற நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று ஜொ்மனி நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் உக்ரைனுக்கு லெப்பா்ட்-2 பீரங்கிகள் அனுப்பப்படும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், தங்களது அதிநவீன எம்1 அப்ரம்ஸ் ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது.

அமெரிக்காவைப் பின்பற்றி, தங்களது லெப்பா்ட்-2 பீரங்கிகள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்று ஜொ்மனியும் அறிவித்தது. மற்ற ஐரோப்பிய நாடுகளும் தங்களிடமுள்ள லெப்பா்ட்-2 பீரங்கிகளை ஜொ்மனிக்கு அனுப்பவிருப்பதாக தெரிவித்தன.

இது குறித்து ரஷியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அதற்கு அடுத்தபடியாக, போரில் ரஷியாவை எதிா்கொள்ள தங்களுக்கு அதிநவீன போா் விமானங்கள் தேவை என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

குறிப்பாக, பல போா்களின் போக்கை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்காவின் எஃப்-16 ரக போா் விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், எஃப்-16 போா் விமானங்களை உக்ரைனுக்கு அளிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT