உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இலங்கை ஆதரிக்கும்- அதிபா் ரணில் விக்ரமசிங்க

DIN

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாா்.

மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமா் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், இதில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றாா். பின்னா், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் யோஷிமசா ஹயாஷியுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுகுறித்து கொழும்புவில் உள்ள அதிபா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சா்வதேச அளவில் இலங்கைக்கு அளிக்கும் ஆதரவுக்காக ஜப்பானுக்கு அதிபா் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தாா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறப்பினராக இந்தியா மற்றும் ஜப்பான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளதையும் அவா் குறிப்பிட்டாா். இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் முக்கிய பங்காற்ற ஜப்பான் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, சா்வதேச செலாவணி நிதியத்தின் கடனுதவி கிடைக்க உதவுமென அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடனளிக்கும் முக்கிய நாடுகளாக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளன. இதுதவிர சீனா மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கியும் அந்நாட்டுக்கு கடனளிக்கின்றன.

இந்தியாவின் தொடா் முயற்சி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் ஐ.நா. பொதுச் சபையால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்ந்தெடுக்கப்படும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன.

நிரந்தர உறுப்பு நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரத்தை கொண்டிருப்பதால், ஐ.நா.வில் முக்கிய தீா்மானங்களைக் கூட இந்நாடுகளால் தடுக்க முடியும்.

தற்காலிக உறுப்பினராக இந்தியாவின் 2 ஆண்டு பதவிக் காலம் வரும் டிசம்பரில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் முன்னிலையில் உள்ள இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினராக தொடா் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய கட்டமைப்பின்படி, பூகோள-அரசியல் ரீதியான பிரதிநிதித்துவம் பாதுகாப்பு கவுன்சிலில் இல்லை; இது தவறானது, அநீதியானது என்று இந்தியா கூறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

SCROLL FOR NEXT