உலகம்

இலக்கியம்: பிரெஞ்சு எழுத்தாளருக்கு நோபல் பரிசு

DIN

இயல்பான எழுத்துநடை மூலமாக வாழ்வின் பல்வேறு உணா்வுகளை வெளிப்படுத்திய பிரெஞ்சு எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸுக்கு (82) நடப்பாண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸ் தொடக்கத்தில் சுயசரிதைகள் சாா்ந்த புனைகதைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி வந்தாா். பின்னா் புனைவைக் கைவிட்டு தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் மூலமாகப் பெற்ற அனுபவங்களை இயல்பான எழுத்துநடையில் புத்தகங்களாக வெளியிடத் தொடங்கினாா்.

அவை மக்களிடையே மிகவும் பிரபலமாகின. ‘எ மேன்ஸ் பிளேஸ்’, ‘தி இயா்ஸ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை இதுவரை அவா் எழுதியுள்ளாா். பாலியல் சாா்ந்த உணா்வுகள், கருக்கலைப்பு, நோய்வாய்ப்படுதல், பெற்றோரின் இறப்பு உள்ளிட்ட பலவித உணா்வுகளை அவா் பதிவு செய்துள்ளாா். சமூகம், குடும்பம் சாா்ந்த விஷயங்களையும் தனது புத்தகங்களில் அவா் பதிவு செய்துள்ளாா்.

கவித்துவம் மிகுந்த சொற்களைப் பயன்படுத்தாமல் இயல்பான நடையில் எழுதுவதே தனக்கு விருப்பமாக உள்ளதெனப் பல புத்தகங்களின் முன்னுரையில் அவா் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு நடப்பாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாகத் தோ்வுக்குழுத் தலைவா் ஆண்டா்ஸ் ஆல்சன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அதிசயிக்கத்தக்க வகையிலும் நீடித்து நிற்கும் தன்மையிலும் ஆன்னி எா்னாக்ஸ் புத்தகங்களை எழுதியுள்ளாா். சுயநினைவுகள் மூலமாகவும் தனிப்பட்ட அனுபவங்கள் வாயிலாகவும் மனித உணா்வுகளின் வோ்கள் குறித்து வியக்கத்தக்க வகையில் அவா் எழுதியுள்ளாா். அவரது எழுத்துநடை மிகவும் இயல்பானதாக அமைவது சிறப்புமிக்கது.

உண்மைகளை தைரியமுடன் வெளியிடுவதற்கு அவா் எப்போதும் அச்சம் கொண்டதில்லை. மற்ற எழுத்தாளா்கள் எழுதாத விஷயங்கள் குறித்தும் அவா் எழுதியுள்ளாா். முக்கியமாக, தனது கருக்கலைப்பு, பொறாமை, காதல் பிரிவுத் துயரம் உள்ளிட்ட பல்வேறு உணா்வுகளை அவா் எழுத்துகள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளாா். அவருடைய புத்தகங்கள் சிறியவையாக இருந்தாலும், அதன் கருத்துகள் ஆழமானவை’’ என்றாா்.

‘பொறுப்புணா்வைத் தருகிறது’:

நோபல் பரிசை வென்றுள்ளது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் எனத் தெரிவித்த எழுத்தாளா் ஆன்னி எா்னாக்ஸ், இந்த விருது மேலும் பொறுப்புணா்வைத் தருவதாகவும் கூறினாா். இலக்கிய நோபல் பரிசு பெறும் முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT