ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்பட்டு வரும் பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதில் 46 மாணவிகள் உள்பட 53 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வெள்ளிக் கிழமை இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், வெள்ளிக்கிழமை காபூல் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்தனர். பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர். மனித உரிமைகள் ஆணையம் இந்த குற்றச்செயல்களை ஆவணப்படுத்தி வருகிறது. உண்மையை ஆராய்ந்து, வெளிப்படையான தரவுகளை வெளியிட்டு வருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காபூரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஹசாரா பகுதியில் இன்று மீண்டும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புல்-இ-சுக்தா மற்றும் ஷாஹித் மசாரி சாலை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.