ஷாங்காய்: சீனாவில் கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக அந்த நாட்டு அரசு கடைபிடித்து வரும் மிகக் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ‘கரோனா கட்டுப்பாடு வேண்டாம்', 'சுதந்திரம் வேண்டும்', 'சுதந்திரம் வெல்லும்' என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கரோனா கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டில் இத்தனை அதிகம் பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
ஏற்கெனவே, கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் முதல்முறையாக கரோனாவுக்கு ஒருவா் சில நாள்களுக்கு முன்பு பலியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், நாள்தோறும் கரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தீவிபத்தின் போது அந்தக் கட்டடத்திலிருந்தவா்கள் வெளியேற போலீஸாா் தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனை அதிகாரிகள் மறுத்து வரும் நிலையிலும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொந்தளித்த அந்த நகர மக்கள், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக வீதிகளில் வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இது அங்கிருந்து வெளியான விடியோக்கள் மூலம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
இதையடுத்து சீனாவின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை 40,000 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகின்றன.
அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளுக்கு கடுமையான தண்டனைகள் உள்ள சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது சீனா இதுவரை கண்டிராத மிகவும் அபூா்வமானதாக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், போராட்டங்களின் ஒரு அரிய திருப்பமாக பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களில் இருந்து போராட்டங்களின் விடியோக்கள் பரவத்தொடங்கியுள்ளன, கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து மாணவர்களும் வீதிகளில் வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றனர். அந்நாட்டின் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை “காலை 11:30 மணிக்கு மாணவர்கள் கேன்டீனின் நுழைவாயிலில் பதாகைகளைப் பிடித்தப்படி போராடங்களில் ஈடுபடத் தொடங்கினர், பின்னர் அதிகமான மக்கள் திரள ஆரம்பித்தனர். போராட்டத்தின் போது மாணவர்கள் 'தேசிய கீதம்' மற்றும் 'சர்வதேசம்' பாடினார்கள். பின்னர், சில மாணவர்கள் அரசுக்கும், அதிபருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர், ஆனால், எதிர் கோஷங்கள் சத்தமாக இல்லை. போராட்டதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் உண்மையில் என்ன கோஷம் எழுப்பது என்பது தெரியாமலே பங்கேற்றிருந்தனர். மேலும், ‘கரோனா கட்டுப்பாடு வேண்டாம்', 'சுதந்திரம் வேண்டும்', 'சுதந்திரம் வெல்லும்' என்று மாணவர் கோஷங்களை எழுப்பினர்
சீனாவில் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பொதுமுடக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பெய்ஜிங், ஷாங்காய், உரும்கி மற்றும் சின்ஜியாங் ஆகிய இடங்களில் நடந்த மக்களின் போராட்டங்கள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாக இடம் பெற்றுள்ளன.