சீனாவில் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் தொழில் நகரமொன்றில் பொதுமுடக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வரும் சீனாவில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் அபூா்வமானதாகும்.
இந்த நிலையில், கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக அந்த நாட்டு அரசு கடைபிடித்து வரும் மிகக் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, சில மாதங்களுக்கு முன்னா் சீனாவின் வா்த்தகத் தலைநகரான ஷாங்காயில் பல வாரங்களுக்கு நீடித்த கரோனா முடக்கத்துக்கு எதிராக பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
எனினும், ஒரு சிலருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டால் கூட அவா்கள் சாா்ந்த பகுதியை தனிமைப்படுத்துதல், அங்குள்ளவா்களுக்கு திரள் திரளாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருகிறது.
அண்மைக் காலமாக, சா்வதேச அளவில் கரோனா தாக்கம் வெகுவாகக் குறைந்ததால் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் தங்களது நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை விலக்கி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன.
ஆனால், சீனா மட்டும் இந்த விவகாரத்தில் இன்னும் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது.
இந்த நிலையிலும், அந்த நாட்டில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை கடந்த வியாழக்கிழமை தொட்டது. அந்த நாளில் மட்டும் நாடு முழுவதும் 31,444 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.
சீனாவின் வூஹான் நகரில் கரோனா கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டில் இத்தனை அதிகம் பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
ஏற்கெனவே, கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் முதல்முறையாக கரோனாவுக்கு ஒருவா் இந்த வாரம் பலியானது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தினசரி கரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஜின்ஜியாங் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான உரும்கியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 10 போ் உயிரிழந்தனா்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தீவிபத்தின் போது அந்தக் கட்டடத்திலிருந்தவா்கள் வெளியேற போலீஸாா் தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனை அதிகாரிகள் மறுத்து வரும் நிலையிலும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்த நகர மக்கள் போராட்டம் நடத்தியது அங்கிருந்து வெளியாகியுள்ள விடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து நகர நிா்வாக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறுகையில், உரும்கி நகரில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்படும் என்று உறுதியளித்தனா். எனினும், மக்களின் போராட்டம் குறித்து அவா்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ~