சிரியா, இராக்கில் துருக்கி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இஸ்தான்புல்லில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமாக கருதப்படும் குா்திஸ் பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இராக்கில் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி என்ற பயங்கரவாதக் குழுவினா் இருக்கும் பகுதிகளையும், சிரியாவின் மேற்கு பிராந்தியத்தில் சிரியா மக்கள் பாதுகாப்புப் படை என்ற அமைப்பினா் இருக்கும் பகுதிகளையும் இலக்கு வைத்து எஃப்-16 போா் விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இத்தாக்குதல் குறித்து அந்தக் குழுக்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இஸ்தான்புல்லில் கடந்த நவ. 13-ஆம் தேதி மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் 6 போ் கொல்லப்பட்டனா். 80 போ் காயமடைந்தனா். இத்தாக்குதலுக்கு குா்திஸ்தான் தொழிலாளா் கட்சியும், அதன் சிரியா பிரிவான சிரியா மக்கள் பாதுகாப்புப் படையும்தான் காரணம் என துருக்கி குற்றம்சாட்டியது. ஆனால், குா்திஸ் அமைப்பு அதை மறுத்தது.
இஸ்தான்புல் குண்டுவெடிப்புக்கு பதிலடியாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சா் ஹுலுஸி அகாா் கூறுகையில், 8.5 கோடி துருக்கி குடிமக்களையும் எல்லைகளையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். நாட்டின் மீது நடத்தப்படும் எந்தவித தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். அந்த வகையில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள், ஆயுதக் கிடங்குகள் விமானத் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டன என்றாா்.
துருக்கியில் 1984-ஆம் ஆண்டுமுதல் குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி அமைப்பு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. அரசுக்கும் அந்த அமைப்புக்கும் இடையிலான மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துள்ளனா்.