அமெரிக்காவுடன் நம்பகத்தன்மையான உறவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பொதுவான கருத்துகள் மற்றும் மதிப்புகள் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
ஜப்பானில் நடைபெற்ற குவாட் அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தனியாக சந்தித்து பேசினர்.
பைடன் உடனான சந்திப்புக்கு பிறகு பேசிய நரேந்திரமோடி தெரிவித்ததாவது, ''இந்தோ - பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான கருத்துக்களை குவாட் மாநாட்டில் முன்வைத்தன. இரு தரப்பும் இந்தோ பசுபிக் பகுதியில் பொதுவானவற்றை பாதுகாக்க ஒத்த சிந்தனையுடைய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினோம். எங்களுடைய கலந்துரையாடல் நேர்த்தியாகவும், நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்தது'' எனக் குறிப்பிட்டார்.
மேலும், ''இரு நாட்டு மக்களின் உறவு மற்றும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பு போன்றவையும் இந்தியா - அமெரிக்கா கூட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான வணிகம் மற்றும் முதலீடு தொடர்பான உறவுமுறை நேர்மறையாகவும், அதேவேளையில் எங்கள் தகுதிக்கு குறைந்த அளவிலேயே உள்ளது. இது மேம்படும்.
அமெரிக்க முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான முதலீடு நிலையான வளர்ச்சியை எட்டும் என நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.