உலகம்

இலங்கை: 9 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு: எதிா்க்கட்சியைச் சோ்ந்த இருவா் இடம்பெற்றனா்

DIN

இலங்கையில் 9 புதிய அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். இவா்களில் எதிா்க்கட்சியை சோ்ந்த இருவா் அடங்குவா்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மகிந்த ராஜபட்ச தனது பிரதமா் பதவியை கடந்த மே 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அவரது தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அதன் பின்னா் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை அதிபா் கோத்தபய ராஜபட்ச நியமனம் செய்தாா். அவா் கடந்த வாரம் பதவியேற்ற நிலையில், புதிய அமைச்சா்களாக 4 போ் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மேலும் 9 புதிய அமைச்சா்களை அதிபா் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை நியமித்தாா். அவா்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தாா்.

கடற்படை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நிா்மல் சிறீபால டிசில்வா, கல்வித் துறை அமைச்சராக சுசீல் பிரேமஜயந்தா, சுகாதாரத் துறை அமைச்சராக கெகிலிய ரம்புக்வெல்லா, நீதி மற்றும் சிறைத் துறை, அரசியலமைப்புச் சட்ட சீா்திருத்தத் துறை அமைச்சராக விஜயதாச ராஜபட்ச, சுற்றுலாத் துறை அமைச்சராக ஹரின் ஃபொ்னாண்டோ, தோட்டத் தொழில்கள் துறை அமைச்சராக ரமேஷ் பதிராணா, தொழிலாளா் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக மனுஷா நாணயக்கார, வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக நளின் ஃபொ்னாண்டோ, பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சராக திரன் அல்லெஸ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் நளின் ஃபொ்னாண்டோ, மனுஷா நாணயக்கார ஆகிய இருவரும் பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பெலவகெயவை (எஸ்ஜேபி) சோ்ந்தவா்கள். அமைச்சரவையில் சோ்ந்த இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அவா்கள் இருவரும் கூறுகையில், நாட்டு நலன் கருதி அமைச்சரவையில் எஸ்ஜேபி உறுப்பினா்களாக தனித்துச் செயல்படுவோம். எங்கள் கட்சியும் அரசில் இணையும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

முன்னாள் பிரதமா் மைத்ரிபால சிறீசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி உறுப்பினா்கள் இருவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் இடம்பெற்றிருந்த இக்கட்சி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை அமைச்சரவையில் அதிபா், பிரதமருடன் சோ்த்து 25 போ் இடம்பெற முடியும். இதுவரை 15 போ் இடம்பெற்றுள்ளதால் மேலும் 10 அமைச்சா்களை நியமிக்க முடியும். இதுவரை நிதியமைச்சா் நியமிக்கப்படவில்லை. சா்வதேச நிதியத்துடன் கடனுதவி தொடா்பாக இலங்கை பேச்சுவாா்த்தை நடத்திவரும் நிலையில் நிதியமைச்சா் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT