ஆப்கனில் அரசுப் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் பணி நீக்கம் செய்யப்படுவர் என தலிபான்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆப்கனில் அரசுப் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைத்திருக்க வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாடியை ஷேவ் செய்யக்கூடாது, நீண்ட, தளர்வான மேலாடை மற்றும் கால்சட்டை, தொப்பி அல்லது தலைப்பாகை ஆகியவற்றைக் கொண்டுள்ள உள்ளூர் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி ஊழியர்கள் சரியான நேரத்தில் பிரார்த்தனை செய்வதை உறுதி செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன்: விமானத்தில் பெண்கள் தனியாக பயணிக்கத் தடை
அரசு ஊழியர்கள் இந்த புதிய விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை அரசு அலுவலங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆடைக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் இருந்தாலோ அல்லது ஆண் ஊழியர்கள் தாடி வைத்திருக்கவில்லை என்றாலோ பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும் தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
பொது ஒழுக்க அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆப்கனில் பெண்கள் விமானத்தில் தனியாக பயணிக்கக் கூடாது, பூங்காக்களில் ஆண், பெண் சேர்ந்து செல்லக்கூடாது, 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பள்ளி செல்லக் கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் உள்நாட்டிலேயே தலிபான்கள், மக்களின் எதிர்ப்பைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | 'ஆப்கனில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்' - அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கூட்டறிக்கை