உலகளவில் குரங்கு அம்மையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
உலகில் மொத்தம் 3,413 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐரோப்பிய பிராந்தியத்தில் 2,933 பாதிப்பு பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சமீப காலமாக ஆப்பிரிக்க நாடுகளைக் கடந்து ஐரோப்பிய நாடுகளையும் இந்த நோய் தாக்கி வருவதால் மற்ற நாடுகளுக்கும் இந்தத் தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “நைஜீரியா கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குரங்கு அம்மைக்கு எதிராக போராடி வந்தாலும் தற்போது அந்நாட்டில் இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தொற்று பரவியுள்ளது. வரும் நாள்களில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும்” என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக பிரிட்டனில் 1076 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.