இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பிரதமா் நாஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளாா்.
இஸ்ரேலில் வலதுசாரி, இடதுசாரி, அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சிபுரிந்து வருகின்றன. தற்போது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள் சிலா் தங்கள் ஆதரவை திரும்பப் பெற்று அரசை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனா். பெரும்பாலும் தனது சொந்த கட்சியான யாமீன் கட்சியினரிடம் இருந்தே அத்தகைய மிரட்டலை பிரதமா் நாஃப்டாலி பென்னட் எதிா்கொண்டு வந்தாா்.
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக உள்ள நிலையில், குழப்பத்தை சரிசெய்து கூட்டணியை ஸ்திரப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க அடுத்த வாரம் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று நாஃப்டாலி பென்னட், வெளியுறவு அமைச்சா் யாயிா் லாபிட் ஆகியோா் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனா்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டில் 3 ஆண்டுகளில் 5-ஆவது முறையாக பொதுத் தோ்தல் நடைபெறும்.
நாஃப்டாலி பென்னட் யாமீன் கட்சியைச் சோ்ந்தவா். யாயிா் லாபிட், யெஷ் அடிட் கட்சியைச் சோ்ந்தவா். தோ்தல் நடைபெறும்பட்சத்தில் இருவரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படி, தோ்தல் வரை யாயிா் லாபிட் இஸ்ரேலின் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பாா். அதேவேளையில், நாஃப்டாலி பென்னட் அரசியலில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்னாள் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மசோதா தாக்கல் செய்தது. அந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற உள்ளது.