சுனாமியால் பாதிக்கப்பட்ட டாங்கா தீவுக்கு பேரிடர் புனரமைப்பு உதவியாக 2 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பசிபிக் பெருங்கடல் நாடான டாங்கா அருகே, கடலடியில் உள்ள எரிமலையில் ஏற்பட்ட திடீா் சீற்றம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. அதையடுத்து, எரிமலைப் பிழம்பும், நெருப்பு மற்றும் சாம்பலும் கடலுக்கு வெளியே எழுந்தன.
இந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக டாங்காவிலும், ஃபிஜி தீவிலும் சுனாமி அலை எழுந்தது. இதனால் டாங்கா தீவு உள்பட அருகில் இருந்த நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் டாங்கா தீவுக்கு சுனாமி நிவாரண உதவி வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பனிப்பொழிவில் தவிக்கும் ஆப்கானிஸ்தான்: இதுவரை 42 பேர் பலி
டாங்கா தீவின் நிலைக்கு ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் போது, இந்தியா டாங்காவிற்கு ஆதரவாக நின்றதை குறிப்பிட்டுள்ளது.