கம்போடியாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
12 மணி நேரம் நீடித்த இந்த பயங்கர தீ விபத்தில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈபட்டுள்ளன.
இதையும் படிக்க: ’விஜய் 67’ இப்படித்தான் இருக்கும்: லோகேஷ் கனகராஜ்
இந்த துயர சம்பவம் கம்போடியாவின் எல்லையோர நகரமான போய்பெட்டில் நிகழ்ந்துள்ளது. இந்த அசம்பாவிதத்தின்போது பலர் அந்த உணவகத்தின் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தாய்லாந்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பான விடியோ ஒன்றிணை கம்போடியா தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில், அந்தப் பகுதியில் உள்ள பலரும் உணவகத்தின் உள்ளே சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்குமாறு அலறுகின்றனர். அதேபோல தீ வேகமாக பரவியதில் பல அடுக்கு மாடிகளைக் கொண்ட அந்த உணவகத்தின் மேலிருந்து ஒருவர் விழும் காட்சியும் பதிவாகியுள்ளன. அங்கு கூடியிருந்த மக்கள் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்து அனைவரையும் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிடுவதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: விரைவில் வருகிறது ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: யாருக்காகத் தெரியுமா?
இது குறித்து தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் கூறியதாவது: நாங்கள் உணவகத்தின் 13,14,15-ஆவது மாடிகளில் இருந்து உதவிக்கு அழைக்கும் குரலினைக் கேட்டோம். மாடியில் இருந்தவர்கள் தங்களது கைப்பேசி விளக்குகளை (ஃப்ளாஸ் லைட்) ஒளிரச் செய்து ஆபத்தில் மாட்டிக் கொண்டதை வெளிப்படுத்தினர். தீ கட்டுக்கடங்காது பரவியது. எங்களது தீயணைப்பு வாகனங்களின் குழாய்கள் உணவகத்தின் அந்த மாடிகளுக்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயிணை அணைக்கும் அளவுக்கு திறன் கொண்டவை இல்லை என்றார்.
உணவகத்தில் தீ கடுமையாகப் பரவியதாலும், கரும்புகை சூழ்ந்ததாலும் பலர் உரிழக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.