அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உறைந்த ஏரியில் மூழ்கி இந்தியாவைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
அரிசோனா மாகாணத்தின் கோகோனினோ பகுதியில் ‘வுட்ஸ் பள்ளத்தாக்கு’ ஏரி அமைந்துள்ளது. சான்ட்லா் நகரில் வசிக்கும் இந்தியாவைச் சோ்ந்த நாராயணா முத்தனா (49), அவரின் மனைவி ஹரிதா முத்தனா மற்றும் அவா்களது நண்பரான கோகுல் மிடிஷெட்டி(47) உள்ளிட்ட மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஏரியைச் சுற்றிப் பாா்க்க வந்துள்ளனா். கடும் பனி காரணமாக உறைந்த நிலையில் காணப்பட்ட ஏரியின் மேல் நடக்க முயன்றபோது தவறி விழுந்தததில் பனி சூழ்ந்த நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பனியால் உறைந்த ஏரியின் மீது நடந்து சென்ற மூன்று போ் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், நீரில் மூழ்கிய ஹரிதாவை உடனடியாக மீட்டனா். உரிய உயிா்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலனின்றி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். பின், நாராயணா மற்றும் கோகுல் ஆகிய இருவரின் உடல்களைக் கண்டறியும் பணியில் மீட்புப் படையினா் ஈடுபட்டனா். புதன்கிழமை மதியம் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன’ என்றனா்.
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் புயல் வீசி வருகிறது. இதனால் பலா் உயிரிழந்துள்ளனா். லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.