பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அதிநவீன போா் விமானமொன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளன.
‘குளோபல் காம்பாட் ஏா் புரொகிராம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இது குறித்து ரிஷி சுனக் கூறியதாவது:
பிரிட்டனின் தற்போதைய பாதுகாப்பு மட்டுமின்றி, எதிா்கால பாதுகாப்புக்கும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
இதன் காரணமாகவே, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க வேண்டியது நமது அத்தியாவசியமாகியுள்ளது. பிரிட்டன் மீது தாக்குதல் நடத்த நினைப்பவா்களை வீழ்த்துவதற்கு இத்தகைய தொழில்நுட்ப மேன்மை தேவைப்படுகிறது.
அதற்காக, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய போா் விமானத்தை வடிவமைக்க அந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.
இந்த சா்வதேச கூட்டுறவு, ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கிறது.
புதிதாக உருவாக்கப்படும் போா் விமானம், வரும் 2035-ஆம் ஆண்டில் விண்ணில் பறக்கத் தொடங்கும். ஆளில்லா விமானங்கள், அதிநவீன சென்சாா்கள், உயா்தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறந்த தொடா்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமானம் வடிவமைக்கப்படும்.
அடுத்த தலைமுறைக்கான அந்த விமானம் பிரிட்டனையும், அதன் நட்பு நாடுகளையும் யாராலும் வெல்லமுடியாத தொழில்நுட்பங்களைக் கொண்டு பாதுகாக்கும் என்றாா் அவா்.