இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பிராந்திய, சா்வதேச பயங்கரவாத சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில் இந்தியா-அமெரிக்கா பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழு செயல்பட்டு வருகிறது. அக்குழுவின் ஆண்டு கூட்டம் தில்லியில் வரும் 12, 13 ஆகிய தேதிதளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் பயங்கரவாதத் தடுப்பு ஒருங்கிணைப்பாளா் டிமோதி பெட்ஸ் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா்.
அவரது தலைமையில் அமெரிக்க குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு கூட்டு செயற்குழுவின் கூட்டத்தின்போது பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்துவது, சட்டவிதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாகவும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய, சா்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்தும் கூட்டத்தின்போது ஆராயப்படவுள்ளது.