பருவமழை தொடங்கிய நிலையில், இந்தோனேசியாவில் மிகப் பெரிய எரிமலையில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக அது வெடித்துச் சிதறியதால் அருகிலிருந்த கிராமங்களில் வீடுகள் பாலங்கள் நாசமாகின.
மிகவும் அதிக மக்கள் தொகை நிறைந்தப் பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய எரிமலை கடந்த வார இறுதியில் சீற்றம் அடைந்தது.
இந்தோனேசியாவின் மிக உயரமான எரிமலையில் சீற்றம் ஏற்பட்ட நிலையில், நேற்று வானிலை சற்று சீரடைந்ததைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களை மீட்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக உயரமான செமேரு எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை சீற்றம் ஏற்பட்டது. இதனால் 1,500 மீட்டா் உயரத்துக்கு சாம்பல் மண்டலம் எழுந்தது.
அதையடுத்து அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் ஊா்களில் ஏராளமான வீடுகள் சாம்பலில் புதையுண்டன. இதில் யாரும் உயிரிழந்ததாக உடனடி தகவல் இல்லை.
எரிமலை சீற்றம் ஏற்பட்ட பகுதி வானிலையில் திங்கள்கிழமை சற்று முன்னற்றம் இருந்ததால், அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணியை மீட்புக் குழுவினா் தொடங்கினர்.
பல வீடுகள், பாலங்கள் எரிமலை சீற்றத்தால் சேதமடைந்திருப்பதாகவும், பல கிராமங்களில் இருக்கும் வீடுகள் சீரமைக்க முடியாத வகையில் சிதிலமடைந்துவிட்டதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எரிமலை சாம்பலுக்குள் சின்ன சின்ன கட்டங்கள் மூழ்கியிருப்பதையும், ஏராளமான கட்டடங்களின் மேற்பகுதி எரிந்து சாம்பலாகியிருப்பதையும் புகைப்படங்கள் மூலம் அறிய முடிகிறது.
எரிமலையிலிருந்து உருவான லாவா எனும் தீப்பிழப்பு, நிலப்பரப்பில் ஓடி அருகிலிருந்த ஆற்றில் கலந்துள்ளது. இந்த தீப்பிழம்பு சென்ற வழிகளில் இருந்த கட்டடங்கள், பாலங்கள், சாலைகள் என எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டும் டிசம்பர் மாதம் இந்த எரிமலை வெடித்துச் சிதறி பெரியஅளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இப்பகுதியிலிருந்த 51 பேர் பலியாகினர். ஏராளமான கிராமங்கள் சாம்பலாகின. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.