தங்கள் நாட்டின் கொள்கைகளை விளக்கும் வகையில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு வெடிகுண்டு, துப்பாக்கி என பெயர் வைக்குமாறு வடகொரிய அரசு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர், மென்மையான பெயர்களை வைக்காமல், இதுபோன்ற தேசபக்திப் பெயர்களை வைக்க வேண்டும் என்றும், நாட்டின் கொள்கை மற்றும் கருத்தியல் தொடர்புடைய பெயர்களாக இருக்க வேண்டும் என்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. டிச. 8ஆம் தேதி சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஏராளமான ஏவுகணை சோதனைகளை நடத்தியும், அணு ஆயுத சோதனை நடத்தியும், அண்டை நாடுகளையும், உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பிறப்பித்திருக்கும் இந்த உத்தரவு நிச்சயம் அந்த நாட்டு மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது.
துப்பாக்கி, வெடிகுண்டு, செயற்கைக்கோள் போன்ற தேசபக்தி பெயர்களை வைக்காமல், மென்மையான பெயர்களை வைக்கும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா - வட கொரியா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு, வட கொரியாவில், முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் நினைவு தினத்தை முன்னிட்டு, 11 நாள்கள் நாட்டில் யாரும் சிரிக்க, கடைக்குச் சென்று பொருள்கள் வாங்க, குடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.