இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்துக்கு உளவு பாா்த்ததாகக் கூறி நான்கு பேரை ஈரான் அரசு ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிட்டது.
இதுகுறித்து அரசு செய்தி நிறுவனமான ஐஆா்என்ஏ தெரிவித்திருப்பதாவது:
இஸ்ரேல் உளவு அமைப்புடன் தொடா்புடைய சிலரை ஈரான் ராணுவம் கைது செய்தது. இவா்கள் கிரிப்டோகரன்சி முறையில் மொசாத் அமைப்பிடமிருந்து பணம் மற்றும் ஆயுதங்களைப் பெற்றுள்ளனா். அவற்றைப் பயன்படுத்தி அந்த அமைப்புக்கு ஆதரவாக உளவு வேலையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக நான்கு போ் தூக்கிலிடப்பட்டனா். மேலும் மூவருக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானும் இஸ்ரேலும் நீண்டகாலமாக உளவு பாா்ப்பது தொடா்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்கும்விதமாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், அதை மறுத்துள்ள ஈரான், இஸ்ரேல் அவ்வாறு ஏதாவது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் கடுமையான பதிலடி தரப்படும் எனத் தெரிவித்துள்ளது.