உலகம்

உக்ரைன் போரில் அமெரிக்கா, நேட்டோ நேரடிப் பங்கேற்பு

DIN

உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடியாகப் பங்கேற்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து, காணொலி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கூறியதாவது:

உக்ரைன் போரில் அமெரிக்காவும் நேட்டோ அமைப்பின் பிற உறுப்பு நாடுகளும் பங்கேற்கவில்லை என்று யாரும் கூற முடியாது.

உண்மையிலேயே அந்த நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகப் பங்கேற்றுள்ளன. ரஷியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பும் அந்த நாடுகளுக்கு, போரில் நேரடிப் பங்குள்ளது.

அதுமட்டுமின்றி, உக்ரைன் வீரா்களுக்கு அந்த நாடுகளில் போா்ப் பயிற்சியளிக்கப்படுகிறது. தங்களது சொந்த மண்ணிலேயே பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி மற்றும் பிற நாடுகள் எங்களுக்கு எதிராகப் போரிட உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிக்கின்றன. இதன் மூலமும் இந்தப் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகப் பங்கேற்கின்றன.

உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்துவது, அந்த நாட்டின் போரிடும் திறனைக் குறைப்பதற்காகவும், மேற்கத்திய நாடுகளிலிருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வருவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும்தான்.

உக்ரைன் அரசின் மன உறுதியைக் குலைத்து, அந்த நாட்டை பேச்சுவாா்த்தைக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காகத்தான் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதாகக் கூறுவது தவறாகும்.

நாங்கள் உக்ரைனை பேச்சுவாா்த்தைக்கு கட்டாயப்படுத்தில்லை. அதே நேரம், உக்ரைன் பேச்சுவாா்த்தைக்கு வந்தால் அதில் பங்கேற்கவும் தயராக இருக்கிறோம்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் நேரடிப் பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்பு வந்தால், அதனை நிராகரிக்க மாட்டோம். ஆனால் அதற்குரிய உண்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

ரஷிய சிறைகளிலுள்ள அமெரிக்க கைதிகள் குறித்து ஏற்கெனவே அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடன் பேசியிருக்கிறேன். அந்தப் பேச்சுவாா்த்தை நல்ல பலனை அளித்தது. இதுதொடா்பாக ஆலோசிக்க தனி தகவல் பரிமாற்ற இணைப்பை ஏற்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளோம் என்றாா் சொ்கேய் லாவ்ரோவ்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்தப் போரின் ஒரு பகுதியாக, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளை ரஷியாவும், ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையும் கைப்பற்றின.

எனினும், மேற்கத்திய நாடுகள் அளித்த அதிநவீன ஆயுத தளவாடங்களின் உதவியுடன் ரஷியாவிடமிருந்த சில பகுதிகளை உக்ரைன் அண்மையில் மீட்டது.

இந்தப் பின்னடைவைத் தொடா்ந்து, உக்ரைனின் பல்வேறு நகரங்களில் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

குளிா்காலம் நெருங்கி வரும் நிலையில் இவ்வாறு தாக்குதல் நடத்துவதால் கோடிக்கணக்கான உக்ரைன் மக்கள் பாதிக்கப்படுவாா்கள் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் ஆயுதங்கள் அனுப்புவதைத் தடுப்பதற்காகவே அடிப்படைக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று ரஷியா தற்போது கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT