லண்டன்: தந்தை, ரசாயன ஆயுதங்களை எனது நாய்களின் மீது சோதித்துள்ளார் என்று அமெரிக்க ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அல்-கய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஒமர், தான் ஆப்கானிஸ்தானில் சிறுவனாக இருந்த போதே தன்னிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து சுடப் பயிற்சி அளித்ததாகவும், ஒசாமா பின் லேடன், தனது தடம் பற்றி வர பயிற்சி அளித்ததாகவும் கூறுகிறார்.
இதையும் படிக்க.. அஃப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை: இது எப்படி நடத்தப்படும்?
பின் லேடனின் நான்காவது மகனான ஒமர், பல்வேறு சம்பவங்களால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தனது தந்தையுடனான மோசமான நாள்களை மறக்க முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
41 வயதாகும் ஒமர், பிரான்ஸ் நாட்டின் நோர்மாண்டி நகரில் தனது மனைவி ஸைனாவுடன் வசித்து வருகிறார். ஒசாமா பின் லேடன், அடிக்கடி தன்னிடம், தனது பணிகளைத் தொடரும் மகனாக அவர் என்னைத்தான் தேர்வு செய்திருப்பதாகக் கூறுவார். ஆனால், ஒருபோதும் அல் கய்தாவில் இணையுமாறு என்னை வற்புறுத்தியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து வரும் ஒமர், தனது பழைய மோசமான நினைவுகளிலிருந்து வெளியேற இது ஒரு சிகிச்சை போல இருப்பதாகவும், கூறுகிறார்.
தனது தந்தை ஒசாமா பின் லேடனின் உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தினர் கூறியபோதிலும், அதனை தான் நம்பவில்லை என்று கூறும் ஒமர், அவரது உடலை புதைத்திருந்தால், அது எங்கே என்று அறிந்து கொள்வது நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் அந்த உடலை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. கடலில் வீசிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதை நான் நம்பவில்லை, அவர்கள் அமெரிக்க மக்களுக்குக் காட்ட அதனை கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதுகிறேன் என்கிறார் ஒமர்.
ஒசாமா பின் லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு கடந்த 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் சௌதி அரேபியாவில் பிறந்தவர் ஒமர்.