கால்பந்து ஜம்பவான் என்று அழைக்கப்படும் கால்பந்து விளையாட்டு வீரர் பீலே (82) உடல்நலம் பாதிக்கப்பட்டு சாவோ பாவுலோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தான் விரைவாக நலம்பெற வேண்டும் என்று உலகம் முழுவதும் இருந்தும் தனது ரசிகர்களின் பிரார்த்தனைக்கும் விருப்பத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
82 வயதாகும் விளையாட்டு வீரர் பீலேவுக்கு, பெருங்குடலில் சிறிய புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறுவைச்சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பீலேவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக, மகள் கெல்லி நஸிமென்டோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பீலே குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதுமிருந்து வரும் வாழ்த்தும், பிரார்த்தனையும் குவிந்து வருகிறது.
இது குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பீலே கூறியிருப்பதாவது, இதுபோல 0நேர்மறையான தகவல்கள் வருவது எப்போதுமே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும், நான் நலம்பெற வேண்டும் என்று வாழ்த்து அனுப்பிய அனைவருக்கும் நன்றி என்றும், வழக்கமான மாதந்தோறும் வரும் மருத்துவப் பரிசோதனைக்குத்தான் வந்திருப்பதாகவும் பீலே தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணியில் மூன்று முறை இடம்பிடித்தவர் பீலே.