கொழும்பு: பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, தடையை மீறி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைந்துள்ளது.
நவீன தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் சீனாவின் ஆராய்ச்சி மற்றும் உளவு கப்பலானது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியானது முதலே, இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
‘யுவான் வாங்-5’ வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக நியூஸ் ஃபர்ஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கையை நோக்கிய பயணத்தைத் தொடக்கியுள்ளதாக கூறப்பட்ட சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, தடையை மீறி தென் இலங்கை துறைமுகமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை காலை (ஆக.11) 9.30 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது என கொழும்பு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக சீனா தரப்பிலோ அல்லது இலங்கை தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.