சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான முதல் வணிக ரீதியிலான பயணம் தொடங்கியுள்ளது. செல்வந்தர்கள் 3 பேர், சுமார் ரூ.1,250 கோடி செலவில் ஸ்பேக்ஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வணிக ரீதியிலான பயணமாகச் சென்றுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட் நேற்று வெள்ளிக்கிழமை இரவு(ஏப்ரல்.8) அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. இதில், மூன்று பெரும் பணக்காரர்கள் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா தலைமையில் வணிக ரீதியிலான பயணமாகச் சென்றுள்ளனர்.
இஸ்ரேலின் ஓஹியோவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லாரி கன்னோர், தொழிலதிபர் எய்டன் ஸ்டிப்பே மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர் மார்க் பதி என 3 பணக்காரர்களும் தலா ரூ. 420 கோடி செலவில் 10 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்தனர்.
10 நாள் பயணத்தில், இவர்கள் மூவரும் 8 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஒவ்வொரு பணக்காரரும் செலவிடும் தொகை இந்திய ரூபாயில் சுமார் ரூ.420 கோடியை செலவழிக்கின்றனர். இதில் விண்வெளியில் உணவுக்கு மட்டும் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1.5 லட்சம் செலவாகிறது. நான்கு பேரும் ஆக்ஸியம்-1 ஊழியர்கள் என்று அழைக்கப்படுவார்கள். ஆக்ஸியம் ஒரு வணிக விண்வெளி பயண நிறுவனமாகும்.
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ்-அலெக்ரியா, 1995 மற்றும் 2007 இல் நாசாவில் பணிபுரிந்தபோது 4 விண்கலங்களை பறக்கவிட்ட அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர் ஆவார்.
3 பணக்காரர்களும் சேர்ந்து சுமார் ரூ.1,250 கோடி செலவில் விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1998 ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வுக்காக பூமியைச் சுற்றி வருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச விண்வெளி நிலையம். இதுவரை, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்க | சொத்து மதிப்பில் ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளிய இந்தியப் பெண் அக்சதா மூர்த்தி